நடிகர் சந்தானத்தை வைத்து படம் தயாரிக்கும் ஆர்யா?

22 ஆனி 2024 சனி 09:14 | பார்வைகள் : 2866
நடிகரும் தனது நண்பருமான சந்தானத்தை வைத்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்க இருக்கிறார் ஆர்யா. இந்தத் தகவல் இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவானவர்களில் நடிகர் சந்தானம் முக்கியமானவர். வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்கள் என இவர் ஹீரோவாக நடித்து வந்தாலும் வெளிவரும் எல்லா படங்களும் ஹிட் ஆவதில்லை. இருந்தாலும் இவருடைய படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
கடந்த வருடம் சந்தானம் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன படங்களில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படமும் ஒன்று. இந்தப் படத்தின் அடுத்தப் பாகத்தை தான் நடிகர் ஆர்யா தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்கள் ஆர்யா மற்றும் சந்தானம் இருவரும் நல்ல நண்பர்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் காமெடி இப்போது வரையிலும் ரசிக்கப்படுகிறது. இந்த நட்பின் அடிப்படையிலேயே தன் நண்பனை வைத்து ஹிட் ஆன ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் அடுத்த பாகத்தைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ஆர்யா. இதில் இவரும் கெஸ்ட் ரோலில் நடிப்பார் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்தான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.