22 வயது இளைஞருக்கு மரண தண்டனை கொடுத்த கிம் ஜாங் அரசு!
![22 வயது இளைஞருக்கு மரண தண்டனை கொடுத்த கிம் ஜாங் அரசு!](ptmin/uploads/news/World_renu_kim-jong-un 22 year young.jpg)
29 ஆனி 2024 சனி 10:23 | பார்வைகள் : 1171
வடகொரியாவில் 22 வயது இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதாக தென்கொரிய அரசினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு வடகொரியாவின் தெற்கு ஹ்வாங்ஹே (Hwanghae) மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் தூக்கிலிடப்பட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
விவசாய தொழிலாளியான குறித்த இளைஞர், தென்கொரியாவின் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், K-Pop இசையை விநியோகித்துள்ளார்.
இதனால் 2020ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் கிம் ஜாங் உன் அரசு அவருக்கு மரண தண்டனை கொடுத்துள்ளது.
வடகொரியாவில் இருந்து 2023யில் வெளியேறிய 649 பேரின் சாட்சியங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் கடந்த 27ஆம் திகதி தெரிவித்துள்ளது.
சியோல் அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட '2024 வடகொரிய மனித உரிமைகள்' அறிக்கையில் இச்சம்பவம் அம்பலமாகியுள்ளது.
தென்கொரியா உட்பட விரோத நாடுகளில் இருந்து வெளிப்புற தகவல்களை அணுகுவது, வைத்திருப்பது அல்லது விநியோகிப்பது ஆகியவற்றை வடகொரியாவின் சட்டம் தடை செய்கிறது.
மேலும் சட்ட மீறல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் நிபந்தனை விதிக்கிறது.