தமிழகத்தை அச்சுறுத்தும் சீனா: கடலோர பாதுகாப்புக்கு சிக்கல்

12 கார்த்திகை 2023 ஞாயிறு 09:22 | பார்வைகள் : 5277
இலங்கையில் இருந்து சீன அரசு மேற்கொள்ளும் பல்வேறு நிகழ்வுகள், தமிழகத்துக்கு பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக, புவிசார் அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
இந்திய எல்லைக்கு அருகில் உள்ள இலங்கையின் அரியாலை, கவுதாரி முனை, அனலைத் தீவு, நயினா தீவு, நெடுந்தீவு போன்ற பகுதிகளில், சீனா கடல் அட்டை பண்ணைகள் அமைத்து, அதன் வழியாக தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
இந்த பண்ணைகளில் வேலை செய்பவர்கள், சீனாவின் ராணுவ உளவு பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் எளிதில் தமிழகத்துக்குள் ஊடுருவவும் வாய்ப்பு உள்ளது.
இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தை, 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து, அதை தன்பாதுகாப்பு பணி, உளவு சேகரிக்கும் பணிக்காக, சீனா பயன்படுத்தி வருகிறது.
சமீபத்தில், இந்திய மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்பட்டது, இலங்கை அரசு இந்திய மீனவர்களை கைது செய்தது, அவர்களின் படகுகளை கையகப்படுத்தியது எல்லாம் ஆய்வு செய்ய வேண்டிய விவகாரம். இதன் பின்னணியில் சீனாவின் கை இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே உள்நாட்டு பாதுகாப்பு கருதி, தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்துவது அவசியம். தமிழக அரசு தனி கவனம் செலுத்தி புலனாய்வு அமைப்புகளை பலப்படுத்த வேண்டும் வரும் முன் காப்பது சிறந்தது.
இவ்வாறு கூறினர்