Paristamil Navigation Paristamil advert login

பிரதமரை விமர்சித்த ராகுல் :கடுமையாக கண்டித்த பா.ஜ.,

பிரதமரை விமர்சித்த ராகுல் :கடுமையாக கண்டித்த பா.ஜ.,

22 கார்த்திகை 2023 புதன் 06:50 | பார்வைகள் : 5302


உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் தோல்விக்கு பிரதமர் மோடியின் கெட்ட சகுனம் காரணம்' என குறிப்பிட்ட, காங்., - எம்.பி., ராகுலுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

ராஜஸ்தானில் வரும் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்கான இறுதிகட்ட பிரசாரங்களில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

வல்லப்நகர் தொகுதியில் நேற்று காங்., எம்.பி., ராகுல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: 

பிரதமர் மோடி எப்போதும் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்புகிறார்.  <br><br>சில சமயம், 'டிவி'யில் தோன்றி, ஹிந்து மற்றும் முஸ்லிம் பற்றி பேசுவது, சில சமயம் கிரிக்கெட் விளையாட்டை காணச்செல்வது என, அவரது நடவடிக்கை உள்ளது. 

நம் அணியினர் உலக கோப்பையை வென்றிருப்பர். ஆனால் கெட்ட சகுனத்தால் தோற்றுப்போனோம். 'பி எம்' என்றால் கெட்ட சகுனம் என்று அர்த்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: 

பிரதமர் குறித்த ராகுலின் கருத்து கண்டிக்கத்தக்கது. ராஜஸ்தான் மற்றும் பிற மாநில தேர்தல்களில் காங்., தோற்கப்போவதால், அவர் விரக்தியில் இவ்வாறு பேசியுள்ளார். ராகுலின் சாயம் வெளுத்துவிட்டது.

கடந்த, 2007ல் குஜராத் சட்டசபை தேர்தலின் போது, அப்போதைய முதல்வர் மோடியை, மரண வியாபாரி என சோனியா குறிப்பிட்டார். அந்த தேர்தலில் பா.ஜ., மொத்தமுள்ள 182 இடங்களில் 117 இடங்களை வென்றது. காங்., வெறும் 59 இடங்கள் தான் பெற்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ராகுல் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவரை சும்மா விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்