இஸ்ரேல்-ஹமாஸ் : பரிசில் மனிதநேய மாநாடு! - ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பு!

4 கார்த்திகை 2023 சனி 07:00 | பார்வைகள் : 8256
இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், பரிசில் மனிதநேய மாநாடு ஒன்றினை கூட்டுவதற்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
நவம்பர் 9 ஆம் திகதி இந்த மாநாடு பரிசில் இடம்பெற உள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்கள், உலகம் முழுவதும் உள்ள பல நூறு மனிதாபிமான அமைப்பைச் சார்ந்தவர்கள், G20 அமைப்பின் அங்கத்தவர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றார்கள். அவர்களுடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் கலந்துகொள்கிறார்.
«conférence humanitaire» என குறிப்பிடப்படும் இந்த மனிதநேய மாநாட்டின் முக்கிய நோக்கம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் வழங்குவதே ஆகும். குறிப்பாக காஸா பகுதியில் போர் முனையில் சிக்கியுள்ள மக்களுக்கான அத்தியாவசியமான பொருட்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதியில் இருந்து இதுவரை மனிதாபிமான பொருட்களை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக 370 கனரக வாகங்கள் காஸா பகுதிக்கு சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.