Paristamil Navigation Paristamil advert login

நேரலையின் போது  தொலைக்காட்சியை கைப்பற்றிய மர்ம நபர்கள்

நேரலையின் போது  தொலைக்காட்சியை கைப்பற்றிய மர்ம நபர்கள்

10 தை 2024 புதன் 09:38 | பார்வைகள் : 2256


தென் அமெரிக்காவின் ஈக்வடார் நாட்டில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் நேரலையின் போது மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நுழைந்து கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய காவல்துறை தனது சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிடுகையில், அதன் சிறப்புப் பிரிவுகள் சம்பவயிடத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளது.

தொலைக்காட்சி ஊழியர்களை அந்த மாஸ்க் அணிந்த ஆயுததாரிகள் தரையில் படுத்திருக்கவும் உட்காரும்படியும் கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனிடையே துப்பாக்கி சத்தமும் கூச்சலும் கேட்டதாக கூறப்படுகிறது.

நேரலையின் போது நடந்த சம்பவம் என்பதால், மொத்த மக்களும் அந்த காட்சிகளை பார்த்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். 

ஆனால் உடனடியாக நேரலை நிறுத்தப்பட்டது என்றே கூறப்படுகிறது.


மேலும், பொலிசாருக்கு தகவல் அளிக்க வேண்டாம் என்று மிரட்டியுள்ளனர். ஆனால் சம்பவயிடத்திற்கு உடனடியாக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதை இன்னொரு செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி டேனியல் நோபோவா அவசரகால நிலையை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, குறைந்தது ஏழு பொலிஸ் அதிகாரிகள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாட்டின் பணக்காரர்களில் ஒருவரான நோபோவா, நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றார், தெருக்களிலும் சிறைகளிலும் பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான வன்முறை சம்பவங்களைத் தடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.

இதன் ஒருபகுதியாக திங்களன்று நோபோவா 60 நாள் அவசரகால நிலையை அறிவித்தார், சிறைச்சாலைகள் உட்பட இராணுவ ரோந்துகளை செயல்படுத்தி, நாடு முழுவதும் இரவுநேர ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

லாஸ் சோனெரோஸ் கிரிமினல் குழுவின் தலைவரான Adolfo Macias என்பவர் 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சிறையிலிருந்து தப்பித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு நகரமான மச்சலாவில் இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது, அதே நேரத்தில் நான்காவது அதிகாரி குய்டோவில் மூன்று குற்றவாளிகளால் பிணைக்கைதியாக்கப்பட்டார்.

அத்துடன் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் மீது வெடிகுண்டு வீசி தாக்கியதன் பின்னர் மேலும் மூன்று அதிகாரிகள் கடத்தப்பட்டனர். இந்த நிலையில், காவல்துறை தெரிவிக்கையில்,

இந்தச் செயல்கள் தண்டனையின்றி தப்பாது என குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், பொலிஸ் அதிகாரிகளை கடத்தியவர்கள் கோரிக்கை விடுத்தார்களா என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்