Place de la Concorde சதுக்கத்தில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் வாகனங்களுக்கு தடை! - ஆன் இதால்கோ திட்டம்!!

14 தை 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 6467
பரிசில் உள்ள Place de la Concorde சதுக்கத்தின் ஒரு பாதிக்கு நிரந்தர தடை கொண்டுவரப்பட உள்ளது.
இவ்வருடம் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரத்யேகமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளமை அறிந்ததே. இந்த போட்டிகள் இடம்பெறும் நாட்கள் முழுவதும் பரிசை வாகன நெரிசல் அற்ற நகரமாக மாற்றுவதே அந்த திட்டமாகும்.
ஆனால், இந்த கட்டுப்பாடுகளில் சில ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னரும் தொடரும் என ஆன் இதால்கோ அறிவித்தார். அதில் ஒன்று தான் Place de la Concorde பகுதியின் ஒரு பகுதியை மூடுவதாகும். அதனை முற்றுமுழுதாக வாகனங்கள் அற்ற பகுதியாக மாற்றி, அதில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலினை நிரந்தரமாக்குவதே நகரமுதல்வரின் திட்டமாகும்.
ஆன் இதால்கோ கடந்த புதன்கிழமை Place de la Concorde பகுதியில் தற்காலிக விளையாட்டு திடல் ஒன்றை திறந்து வைத்தார். அதில் கூடைப்பந்து, நடன மேடை, சிறிய மிதிவண்டிகளை வைத்து மேற்கொள்ளப்படும் சாகச விளையாட்டு (BMX freestyle), போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட முடியும். ஒரே நேரத்தில் 10,000 பேர் அங்கு கூடமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.