2- வது சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மா இறங்கியது விதி மீறலா?

19 தை 2024 வெள்ளி 08:18 | பார்வைகள் : 4967
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி, 2- வது சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மா களமிறங்கியது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற 3-வது டி-20 போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள் ரசிகர்களின் மனநிலையை பதற்றமாக மாற்றின.
அந்த போட்டியில் கிடைத்த வெற்றி ரோஹித் சர்மாவுக்கு பெருமையை தந்தாலும், அவரின் செயலானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியின் தொடக்கத்தில் களமிறங்கிய ரோஹித் கடைசி வரை நின்று பீல்டிங் செய்தார். பின்னர் சூப்பர் ஓவரிலும் அவரே பேட்டிங் செய்தார்.
அப்போது முதல் சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் வெற்றியடைய 2 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், களைப்புடன் இருந்த ரோஹித் தன்னால் ஓட முடியாது என்று நினைத்து 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறி ரிங்கு சிங்கை களமிறக்கினார்.
ஆனால், அந்த ஓவரும் சமமாக முடிந்ததால் 2 -வது சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மாவே களமிறங்கினார். தற்போது, இவரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசியின் விதியின் படி, சூப்பர் ஓவரில் அவுட் ஆனவர் அடுத்த சூப்பர் ஓவரில் களமிறங்க முடியாது.
ஒருவேளை பேட்ஸ்மேன் காயம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் வெளியேறினால் அந்த பேட்ஸ்மேன் தனது இன்னிங்சை மீண்டும் தொடங்க முடியும்.அப்போது Retired Not-Out என பதிவு செய்ய வேண்டும்.
இதை தவிர வேறு காரணத்தினால் பேட்ஸ்மேன் வெளியேறினால், எதிர் அணியின் கேப்டனின் ஒப்புதலுடன் மட்டுமே மீண்டும் களமிறங்க முடியும்.
ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிமின் ஒப்புதலுடன் தான் ரோஹித் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும்.
முதல்முறையாக இரண்டு சூப்பர் ஓவர்கள் நடப்பதால் இது போன்ற குழப்பங்கள் நடைபெறுகின்றன.
சூப்பர் ஓவரில் ஒருமுறை பந்து வீசியவர் மறுமுறை பந்துவீச முடியாது என்பதைப் போல பேட்ஸ்மேன்களுக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரமேண்டுமென கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.