தடைப்பட்ட Paris-Clermont தொடருந்து! - ஐந்துமணிநேரம் கடும் குளிரில் சிக்கிய பயணிகள்!

20 தை 2024 சனி 07:00 | பார்வைகள் : 8431
பரிஸ் Bercy நிலையத்தில் இருந்து Clermont நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று பழுதடைந்து தடைப்பட்டது. மின்சாரம் இன்றியும், வெப்பமூட்டி இன்றியும் ஐந்து மணிநேரங்களுக்கு மேலாக பயணிகள் குளிரில் தவித்துள்ளனர்.
Intercités ஒன்று நேற்று மாலை 6.57 மணிக்கு கிட்டத்தட்ட ஆயிரம் பயணிகளுடன் பரிசில் இருந்து புறப்பட்டது. இரவு 10.30 மணிக்கு Clermont-Ferrand நகரைச் சென்றடைந்திருக்கவேண்டிய தொடருந்து Nevers (Nièvre) நகரில் இரவு 9.33 மணி அளவில் திடீரென பழுதடைந்து நின்றது.
தொடருந்தின் மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியது. அத்துடன் வெப்பமூட்டியும் செயற்படவில்லை. கடும் குளிருக்குள் பயணிகள் சிக்கினர். முதலில் இரண்டுமணிநேரங்கள் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த சேவைத்தடை இன்று அதிகாலை 3.30 மணிக்கும் மேலாக நீடித்தது.