Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர்  தாக்குதல் ..  உச்சக்கட்டத்தை அடைந்த போர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர்  தாக்குதல் ..  உச்சக்கட்டத்தை அடைந்த போர்

1 தை 2024 திங்கள் 09:51 | பார்வைகள் : 3188


இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போரானது கடந்த  3 மாதங்களாக இடம்பெற்று வருகின்றது.

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளதை அடுத்து தற்போது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியதுடன் காசா முழுவதும் இடைவிடாமல் வான்வெளி வழியாக குண்டுகளை வீசி வருகிறது.

பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள முகாம்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது. 

அத்துடன் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க பதுங்கு குழிகளை குறிவைத்தும் இந்த தாக்குதல் நடத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தின் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானவர்கள் பலியாகி விட்டனர். 

காசா பகுதியில் இதுவரை 21,800 பேர் வரை உயிரிழந்துவிட்டதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடும் போருக்கு மத்தியில் உயிருக்கு பயந்து ஏராளமான பொதுமக்கள் எகிப்தின் ரபா எல்லையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நேற்று 31 ஆம் திகதி புதிதாக வான்வெளி தாக்குதலை நடத்தினர். 

 இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 35 பேர் பலியாகியதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் காசாவில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ரொக்கெட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இஸ்ரேல் மீது சுமார் 20 ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை.

மேலும் வடக்கு இஸ்ரேல் நோக்கி ஈரான் ஆதரவு படையினர் ஏவிய 2 ட்ரோன்களை இஸ்ரேல் படை சுட்டு வீழ்த்தியது. 

இதனால் தற்போது போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்