Paristamil Navigation Paristamil advert login

பீட்சா 4 படத்தில் நாயகனாகும் நாசரின் மகன்...

பீட்சா 4 படத்தில் நாயகனாகும் நாசரின் மகன்...

3 தை 2024 புதன் 03:15 | பார்வைகள் : 1268


கார்த்திக் சுப்புராஜின் முதல் படமான பீட்சா, ஹாரர் ஜானரில் ஒரு பென்ச் மார்க் திரைப்படமாக அமைந்தது. பீட்சாவில் நடித்த விஜய் சேதுபதிக்கும் அது திருப்புமுனையாக அமைந்தது. பீட்சா இரண்டாம், மூன்றாம் பாகங்கள் சுமாராகப் போன நிலையிலும், பீட்சா 4 வருகிறது என்றால், பீட்சா படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

பீட்சாவை தயாரித்த சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் பீட்சா 4 படத்தை தயாரிக்கிறார். இணை தயாரிப்பு எஸ்.தங்கராஜின் தங்கம் சினிமாஸ். இந்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

நடிகர் நாசரின் மகனும் கடராம் கொண்டான், சில நேரங்களில் சில மனிதர்கள் படங்களில் நடித்தவருமான அபிஹாசன் இதில் முதன்மை வேடத்தில் நடிக்க உள்ளார். ராட்சசன், மார்க் ஆண்டனி, சூதுகவ்வும் 2 படங்களின் திரைக்கதையில் பணியாற்றிய எஸ்.ஜே.அர்ஜுன் இதன் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். ஆன்ட்ரூஸ் படத்தை இயக்குகிறார். பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்  விவரங்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

படம் குறித்து சி.வி.குமார் கூறுகையில், “பீட்சா முதல் மூன்று பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் நான்காம் பாகத்தையும் தயாரிப்பது மிக்க மகிழ்ச்சி. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து பீட்சா வெற்றிப் பயணத்தை இப்படம் தக்க வைக்கும் என்று நம்புகிறேன். பொங்கலுக்குப் பின்னர் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது” என்றார்.

நடிகர் அபிஹாசன் கூறுகையில், “தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்களைச் சிறு வயது முதலே தெரியும். அவரது படத்தில் முதல் முறையாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. தரமான கதைகளையும், திறமையுள்ள இளைஞர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வரும் அவர் பீட்சா 4 திரைப்படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்தது சந்தோசமாக உள்ளது. பீட்சா முதல் மூன்று பாகங்களுக்கு நியாயம் செய்யும் வகையிலும், அதே சமயம் வழக்கமான திகில் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு விருந்து படைக்கும் வகையில் பீட்சா 4 இருக்கும். படப்பிடிப்பு தொடங்குவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்