Paristamil Navigation Paristamil advert login

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் அகதி பலி!

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் அகதி பலி!

17 மாசி 2024 சனி 11:41 | பார்வைகள் : 2059


காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் சூடான் நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் பலியாகியுள்ளார். இறைச்சி வெட்டும் பாரிய கத்தி ஒன்றின் மூலம் தாக்க முற்பட்ட நிலையில், காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் Boulevard d'Indochine பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Butte du chapeau rouge இற்கு முன்பாக உள்ள ட்ராம் நிறுத்தத்தில் நின்றிருந்த அகதி ஒருவரிடம் நபர் ஒருவர் சிகரெட் பற்றவைக்க லைட்டர் கோரியுள்ளார். திடீரென ஆக்ரோஷமடைந்த அகதி, அவர் மீது எச்சில் துப்பியும், முகத்தில் தாக்கியும் உள்ளார். அத்தோடு அவர் இறைச்சி வெட்டும் பெரிய கத்தி ஒன்றையும் உருவி எடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த இரண்டாம் நபர் அங்கிருந்து ஓடி தப்பி RATP ஊழியர்களிடம் உதவி கோரியுள்ளார். காவல்துறையினர் மிக விரைவாக சம்பவ இடத்தை நெருங்கினர்.

கத்தி வைத்திருக்கும் அகதியிடம், அதனைக் கீழே போடும் படி பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் பணித்துள்ளனர். ஆனால் அகதி தொடர்ந்தும் ஆக்ரோஷமாகவே செயற்பட்டுள்ளதுடன், காவல்துறையினரை தாக்கவும் முற்பட்டுள்ளார்.

அதையடுத்து மேலதிக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். குற்றத் தடுப்பு பிரிவினர் விரைந்து வந்தனர். நிலமை மேலும் மோசமாக, குறித்த அகதி காவல்துறையினை தாக்க எத்தனித்துள்ளார். அதையடுயடுத்து காவல்துறையினர் அகதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதையடுத்து அகதி சம்ப இடத்திலேயே கொல்லப்பட்டார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்