பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமரன்’...

21 மாசி 2024 புதன் 15:50 | பார்வைகள் : 5679
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்திற்கு ஆரம்பமே எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் பட்டியலின மக்களை அவதூறாக சித்தரித்திருப்பதாகச் சொல்லி நடிகர்கள் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் படங்களை தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'. கடந்த 17-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டீசர் வெளியானது.
டீசரில், காஷ்மீர் இளைஞர்களையும், போராட்டத்தில் ஈடுபடுவோரையும் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதைக் கண்டித்து கும்பகோணத்தில் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது படத்தில் பட்டியலின மக்களை அவதூறாக சித்தரித்துள்ளதாக சொல்லி கண்டன முழக்கமிட்டனர்.
கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்களை கிழித்து காலால் மிதித்து செருப்பால் அடித்து நெருப்பு வைத்து எரித்தனர். உருவபொம்மையை எரிக்க முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதைதான் ‘அமரன்’ திரைப்படம். படம் இன்னும் வெளியாகாத நிலையில் டீசருக்கே கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.