கொழும்பு புற நகரில் தீவிபத்தில் - 50 மாணவர்கள் வைத்தியசாலையில்

8 ஆவணி 2023 செவ்வாய் 10:38 | பார்வைகள் : 8690
கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலையில் கணக்காளராகப் பணியாற்றிய ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தத் தீயினால் வெளியான புகையைச் சுவாசித்ததன் காரணமாக 68 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுவாசக் கோளாறு காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தானை புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் அதன் பெண்கள் கல்லூரி மாணவிகள் குழுவொன்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கந்தானையில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இன்று காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
வெலிசறை கடற்படை அதிகாரிகள், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்புப் பிரிவினர் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.