நைஜீரியாவில் 286 பள்ளி குழந்தைகள் கடத்தல்..! மர்ம கும்பல் மிரட்டல்!

14 பங்குனி 2024 வியாழன் 08:25 | பார்வைகள் : 6566
வடக்கு நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை கடத்திய கும்பல் அவர்களை பாதுகாப்பாக விடுவிக்க $620,000 பணம் கேட்டு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மார்ச் 7 ஆம் திகதி வடக்கு நைஜீரியாவின் கடூனா மாநிலத்தின் Kuriga நகரில், ஆயுத கும்பல் ஒன்று திடீர் தாக்குதல் நடத்தி 8 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் என 286 பேர் பிணைக் கைதிகளாக கடத்தி சென்றனர்.
இந்த பெரும் கடத்தல், 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு நைஜீரியாவில் நடந்த முதல் பெரிய அளவிலான பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவமாகும்.
இந்நிலையில் கடத்தப்பட்டோரின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத் தலைவர் ஜுப்ரில் அமினு (Jubril Aminu), செவ்வாய்க்கிழமை பணய கோரிக்கையுடன் தனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதில், பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிப்பதற்கு மொத்தமாக 1 பில்லியன் நைரா($620,000) பணம் வேண்டும் என கேட்டார்கள் என்று அமினு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடத்தப்பட்ட திகதியில் இருந்து 20 நாட்களுக்கு பணய தொகை செலுத்தப்படாவிட்டால் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என ஆயுத கும்பல் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
கடத்தல்காரர்களின் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை.
ஆனால் பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்டு பணம் கேட்டு கடத்தல் செய்வது நைஜீரியாவின் சில பகுதிகளில் தொடர்ந்து வரும் பிரச்சனையாக உள்ளது.
இதற்கிடையில், கடத்தல்களை தடுத்து நிறுத்துவதிலும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டுவதிலும் நைஜீரிய அரசு தோல்வி அடைந்து உள்ளதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.