இஸ்ரேல் இராணுவத்தின் கொடூர தாக்குதல்... பரிதாப நிலையில் காசா மக்கள்

16 பங்குனி 2024 சனி 05:51 | பார்வைகள் : 7248
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.
இஸ்ரேல் ராணுவம் கடந்த 5 மாதங்களாக நடத்திய தாக்குதலில் 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு சரியான அளவில் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் கிடைக்காததால் பசி பட்டினியால் வாடுகின்றனர்.
பட்டினியால் வாடும் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இங்கும் கடும் நெரிசல் காணப்படுகிறது.
இந்த நிலையில், வடக்கு காசா நகரில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் நடத்திய குறித்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.