சாந்தனின் இறுதி கிரியைகள் ஆரம்பம் - இன்று நல்லடக்கம்

4 பங்குனி 2024 திங்கள் 05:10 | பார்வைகள் : 7631
உடல்நல குறைவு காரணமாக இந்தியா - சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடல் இன்று (04) இரண்டாவது நாளாக உடுப்பிடியில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டு தொடர்ந்து திருச்சி சிறப்பு வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சாந்தன் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார்.
இவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாந்தனின் உடல், நேற்றைய தினம் வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், சாந்தனின் பூதவுடல் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.