Paristamil Navigation Paristamil advert login

பிரபல நடிகரை எச்சரித்த சூரி!

பிரபல நடிகரை எச்சரித்த சூரி!

4 சித்திரை 2024 வியாழன் 15:18 | பார்வைகள் : 1813


”’விடுதலை2’ திரைப்படம் வெளிவந்ததும் உங்களைப் பிரிச்சுடுவாங்க. அதனால, ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க” என நடிகர் சூரி படத்தில் நடித்த சேத்தனிடம் கூறியிருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டப் பலர் நடித்த திரைப்படம் ‘விடுதலை1’. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையை மையப்படுத்திய இந்தக் கதையை படமாக்கி வசூல் ரீதியாகவும் வெற்றியாக்கிக் காட்டினார் வெற்றிமாறன். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தப் படத்திற்காக நடிகர் சூரியின் நடிப்பிற்கு பல விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தது. இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில்தான், படத்தில் மோசமான காவல்துறை அதிகாரியாக நடித்த நடிகர் சேத்தனை குறிப்பிட்டு நடிகர் சூரி எச்சரிக்கை விடுத்து கலகலப்பாக பேசியுள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்வில் அவர் பேசியதாவது, “’விடுதலை1’ படத்திலேயே சேத்தன் அண்ணனின் வில்லத்தனமான நடிப்புக்கு நிறைய பேர் திட்டினாங்க. ‘விடுதலை2’ வரும்போதெல்லாம் வீட்டை விட்டு ஒரு வாரத்திற்கு வெளியே வந்துடாதீங்க. படம் பார்க்க தேவதர்ஷினி அக்காவையும் பொண்ணையும் மட்டும் அனுப்பி வைங்க. தெரியாத்தனமா வெளிய வந்தீங்கன்னா உங்களை பிரிச்சுடுவாங்க.

அண்ணன் அந்த அளவுக்கு வில்லத்தனமான நடிப்பைக் கொடுத்து மிரட்டி இருக்கிறார். ’விடுதலை2’ படம் நிச்சயம் உங்களை அழ வைக்கும். அந்தத் தாக்கம் வீட்டுக்குப் போனாலும் போகாது. இதை ஆணவத்தில் சொல்லல. உங்களைப் போன்ற பார்வையாளர்கள் கொடுத்த தைரியத்தில்தான் சொல்றேன்” என்றார். சமீபத்தில், ’விடுதலை’ திரைப்படம் பல வெளிநாட்டு திரைப்பட விருது விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்