யூத வழிபாட்டுத்தலத்தை தீவைத்து எரிக்க முற்பட்டவர் சுட்டுக்கொலை!
17 வைகாசி 2024 வெள்ளி 13:20 | பார்வைகள் : 3118
ஆயுததாரி ஒருவர் யூத வழிபாட்டுத்தலம் (synagogue) ஒன்றை தீ வைத்து எரிக்கும் முனைப்புடன் செயற்பட்ட நிலையில், அவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Rouen (Seine-Maritime) நகரில் இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. அங்கு rue des Bons-enfants எனும் வீதியில் உள்ள யூத மதத்தினருக்கான வழிபாட்டுத்தலத்திற்கு வருகை தந்த நபர் ஒருவர், கைகளில் கத்தி ஒன்றை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து சம்பவத்தில் காவல்துறையினர் தலையிட்டனர்.
ஆயுதத்தை கீழே போடும்படி காவல்துறையினர் பணித்துள்ளனர். ஆனால் அவர், அதனை பொருட்படுத்தாது, வழிபாட்டுத்தலத்தை எரியூட்ட முற்பட்டுள்ளார். அவரை தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறையினரையும் தாக்க எத்தனித்துள்ளார்.
அதையடுத்து காவல்துறையினர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இச்சம்பவங்கள் அனைத்தும் காவல்துறையினர் அணிந்திருந்த சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது. தற்பாதுகாப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.