Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரதம்: கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்?: இ.பி.எஸ்., கேள்வி

அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரதம்: கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்?: இ.பி.எஸ்., கேள்வி

27 ஆனி 2024 வியாழன் 07:47 | பார்வைகள் : 257


நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பழனிசாமி தலைமையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும். தி.மு.க., அரசு இந்த விவகாரத்தில் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தி உள்ளனர்.
எக்ஸ் சமூகவலைதளத்தில் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டசபையில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்?.
கள்ளச்சாராய மரணங்கள் 60ஐ தாண்டியுள்ள நிலையில், இன்று வரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்?. பயமா ஸ்டாலின் ?. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சி.பி.ஐ., விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

பிரேமலதா ஆதரவு
உண்ணாவிரத போராட்டத்திற்கு தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கள்ளச்சாராய மரணம் தொடர்பாக நாளை கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். கள்ளச்சாராயம் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டாமா?. இந்த போராட்டம் இதோடு முடிந்து விடாது. கள்ளச்சாராயம் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.
சி.பி.ஐ., விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும். அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தில் எங்குமே வேலைவாய்ப்பு இல்லை. அதனால் தான் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர். இவ்வாறு பிரேமலதா கூறினார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்