Paristamil Navigation Paristamil advert login

எதிர்பார்த்த அரசியல் பேசுவதை நடிகர் விஜய் தவிர்த்தது ஏன்?

எதிர்பார்த்த அரசியல் பேசுவதை நடிகர் விஜய் தவிர்த்தது ஏன்?

28 ஆனி 2024 வெள்ளி 14:13 | பார்வைகள் : 425


சென்னையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் நடிகர் விஜய், பரபரப்பாக அரசியல் பேசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பற்றி வாயே திறக்காமல் ஜகா வாங்கினார். அதற்கு காரணம் என்ன வென்று தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த பிறகு நடிகர் விஜய் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் கட்சி தலைவர்களுக்கும், பண்டிகை நாட்களில் மக்களுக்கு வாழ்த்து மட்டுமே தெரிவித்து இருந்தார். 

அரசியல் ரீதியில் எந்த கருத்தும் கூறிவில்லை. விமர்சனமும் செய்யவில்லை.

இன்று, தமிழகத்தில் உள்ள தொகுதி வாரியாக 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. கட்சி துவங்கிய பிறகு , இந்த விழாவில் பங்கேற்கும் விஜய், பரபரப்பாக அரசியல் ரீதியாக கருத்து தெரிவிப்பார், போதை பொருள் நடமாட்டம், கள்ளச்சாராய மரணங்கள், ஊழல் பற்றி பேசுவார் என பலரும் எதிர்பார்த்தனர். இதனால், விழா குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த விழாவில் விஜய் பேசுகையில், தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை இருக்கிறது. தலைவர்கள் என்பது அரசியலில் மட்டும் சொல்லவில்லை. நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். தலைவர்களாக வர வேண்டும்.

மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. இது ஒரு பெற்றோர் ஆகவும், அரசியல் தலைவராகவும் எனக்கு அச்சமாக இருக்கிறது. ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க என சொல்ல நான் இங்கு வரவில்லை. அதற்கான மேடையும் இது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

காரணம் என்ன

ஆளுங் கட்சியை விமர்சிப்பதை விஜய் தவிர்த்ததற்கு முக்கியமான காரணம் ஒன்று கூறப்படுகிறது. அவரது அடுத்த படம் ‛ கோட்' சுமார் 300கோடியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆளுங்கட்சி பற்றி எதையாவது பேசப் போய், அதனால் அவர்களுக்கு கோபம் ஏற்பட்டு ‛ கோட்' படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்வது என்ற பயம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. பெரிய முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களின் ரிலீஸ் ஒரு நாள் தள்ளிப் போனால் கூட பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும். அந்த நிலைமை ‛ கோட் ' படத்திற்கு வரக்கூடாது என்று விஜய் நினைத்து இருக்கலாம்.

இந்த விஷயத்தில் அவர் ஏற்கனவே சூடுபட்டிருக்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இவரது ‛ தலைவா ' படத்திற்கு தலைவலி ஏற்பட்டது. தலைப்பிலேயே அரசியல் கலந்ததால், ‛ நான் ஒரு தலைவர் இருக்கும் போது இன்னொரு தலைவரா' என்று நினைத்த ஜெயலலிதா, தலைவா படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போட்டார். பல நாட்களாக படத்தை தியேட்டரில் ஓட்ட முடியவில்லை.

வேறு வழியில்லாமல் கோடநாட்டிற்கு தேடிச் சென்று அங்கு தங்கியிருந்த ஜெயலலிதாவை சந்தித்து சுயவிளக்கம் கொடுக்க முயற்சி செய்தார் விஜய். ஆனால் சந்திக்க முடியவில்லை. பிறகு சுயவிளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டார். அதன் பிறகு தான் ‛தலைவா' வுக்கு தலைவலி சரியாகி, படம் ரிலீஸ் ஆனது. அந்த பாடத்தை கற்றுக் கொண்ட விஜய், ‛ கோட் ' படத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசியல் பேசாமல் அறிவுரை மட்டும் கூறி விடை பெற்றுவிட்டார்.. 

வர்த்தக‌ விளம்பரங்கள்