Paristamil Navigation Paristamil advert login

சட்டசபைக்குள் குட்கா: ஸ்டாலின் உள்ளிட்ட திமுக., எம்எல்ஏ.,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

சட்டசபைக்குள் குட்கா: ஸ்டாலின் உள்ளிட்ட திமுக., எம்எல்ஏ.,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

22 ஆடி 2024 திங்கள் 08:16 | பார்வைகள் : 3822


கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்ற அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள் மீது உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த நோட்டீசை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக சட்டசபை செயலாளர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் தரப்பில் கூட நோட்டீஸ் வரவில்லை என கூறப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார். மேலும் ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் நோட்டீஸ் அனுப்பாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''4 பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது; கடந்த ஆட்சியில் நோட்டீஸ் அனுப்ப தவறிவிட்டனர்'' என தெரிவித்தார்.

இதையடுத்து நோட்டீஸ் வரவில்லை என கூறியதால் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்டாலின் உள்ளிட்ட அப்போதைய திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்