Paristamil Navigation Paristamil advert login

மார்பகப் புற்றுநோயின் அபாய காரணிகள் பற்றித் தெரியுமா?

மார்பகப் புற்றுநோயின் அபாய காரணிகள் பற்றித் தெரியுமா?

1 ஆடி 2024 திங்கள் 15:07 | பார்வைகள் : 362


மார்பக புற்றுநோய் என்பது உலக அளவில் மக்களை அச்சுறுத்தி வரும் ஒரு மோசமான நோயாக இருந்து வருகிறது. மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் ஆரம்பத்தில் அதனை கண்டறிவதற்கான முக்கியத்துவம் போன்றவை நோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் பற்றி நாம் அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. இந்த பதிவில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்ன மற்றும் நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கான முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

புற்றுநோய் கட்டிகள் என்றால் அது வலி மிகுந்ததாக இருக்கும் என்று பலர் தவறாக கருதுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், மார்பகத்தில் வலி இல்லாத கட்டிகள் என்பது மார்பக புற்றுநோயின் ஒரு முக்கியமான அறிகுறியாக அமைகிறது. குறிப்பாக இது 35 முதல் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களை பாதிக்கிறது.

மார்பக புற்றுநோயின் பிற அறிகுறிகள் : 

அக்குள் பகுதியில் திடீர் வீக்கம் ஏற்படுவது மார்பக புற்றுநோயின் ஒரு அறிகுறி.

மார்பக முளைக்காம்புகளில் ரத்தம் அல்லது ஏதேனும் திரவங்கள் வெளியேறினால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

மார்பகத்தின் தோல் தடினமாகி அதன் அமைப்பில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மார்பகத்தில் உள்ள முளைக்காம்புகள் உள்நோக்கி திரும்பியவாறு காணப்படுவதும் மார்பக புற்றுநோயின் ஒரு முக்கியமான அறிகுறி.

மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த சவால்கள் :

பல இடங்களில் மார்பக புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். புற்றுநோய் என்றாலே அது வலி மிகுந்ததாக இருக்கும் என்று தாங்களாகவே எண்ணிக் கொண்டு, வலி இல்லாத கட்டிகளை பலர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக நோய் தீவிர கட்டத்தை அடைந்த பிறகு அது கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலானதாக அமைகிறது.

மார்பக புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவது அதற்கான வெற்றிகரமான சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மாமோகிராபி போன்ற நோய் கண்டறிதல் முறை மூலமாக மார்பக புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டு, அதற்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது அது கண்டறியப்படும் நிலையை பொறுத்து அமைகிறது.

உதாரணமாக ஆரம்ப கட்ட நிலைகளான 1 மற்றும் 2ல் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை மற்றும் குறைந்தபட்ச கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை போதுமானதாக இருக்கும். புற்றுநோய் கட்டிகளை அகற்றி அதே நேரத்தில் நோயாளியின் வாழ்க்கை தரத்தை பராமரிப்பது இந்த சிகிச்சையின் இலக்காக அமைகிறது.

இதுவே மூன்றாம் கட்ட நிலையில் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் இம்யுனோதெரபி போன்ற பல்வேறு சிகிச்சைகள் தேவைப்படுகிறது. இந்த சிகிச்சை மூலமாக நோய் பராமரிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. எனினும் நிலை 1 மற்றும் நிலை 2 சிகிச்சை பெற்ற நபர்களின் எண்ணிக்கை நிலை 3 மார்பக புற்றுநோய் சிகிச்சை பெற்ற நபர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாக உள்ளது. இதைவிட மோசமாக நான்காம் கட்ட நிலையை அடைந்த மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது மிக மிக சவாலானது. நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாமே தவிர இதனை குணப்படுத்த முடியாது. நோயாளியின் ஆயுளை முடிந்த அளவு அதிகரிப்பதற்கு மருத்துவர்கள் முயற்சிப்பார்கள்.

மார்பக புற்றுநோயை உண்டாக்கும் அபாய காரணிகள் : 

உடற்பருமன் என்பது மார்பக புற்றுநோய்க்கான முக்கியமான அபாய காரணியாக கருதப்படுகிறது.

மது அருந்துவதை குறைத்துக்கொள்வதும், புகைப்பிடிப்பதை தவிர்ப்பதும் மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான முக்கியமான இரண்டு விஷயங்கள்.

வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்து உடலை ஆக்டிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது, குழந்தை பெற்றுக் கொள்வது மற்றும் அதற்கான நேரம் ஆகியவை மார்பக புற்றுநோய் அபாயத்தை தூண்டலாம்.

சிறுவயதில் பூப்படைதல் மற்றும் மெனோபாஸ் போன்றவையும் மார்பக புற்றுநோய்க்கான அபாய காரணியாக அமைகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்