‘புறநானூறு’ கைவிடப்பட்டதா?
![‘புறநானூறு’ கைவிடப்பட்டதா?](ptmin/uploads/news/Cinema_tharshi_pu.jpg)
5 ஆடி 2024 வெள்ளி 16:23 | பார்வைகள் : 481
இயக்குனர் சுதா கொங்கரா மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பின்னர் இவர் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கியிருந்தார்.குறைந்த கட்டணத்தில் விமான சேவை நடத்திய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பல்வேறு விருதுகளையும் அள்ளிச் சென்றது. அதைத் தொடர்ந்து மீண்டும் சூரியாவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டார் சுதா கொங்கரா. அதன்படி சூர்யாவின் 43 வது படமாக உருவாக இருக்கும் புதிய படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. மேலும் புறநானூறு திரைப்படமானது 1950இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. இவ்வாறு படம் தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்தாலும் இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.
இதற்கிடையில் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் படம் கைவிடப்பட்டதாகவும் கூட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் இந்த படத்தில் சூர்யாவிற்கு பதில் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், இயக்குனர் சுதா கொங்கராவிடம் புறநானூறு படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “நான் அடுத்ததாக தமிழ் படம் ஒன்றை இயக்கப் போகிறேன். அது புறநானூறு படமாக கூட இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “புறநானூறு படம் இந்தி எதிர்ப்பு பின்னணியிலான கதை. இது ஒடுக்குமுறை எதிர்ப்பு பற்றி வலுவாக சொல்லும்” என்றும் கூறியுள்ளார்.