PSG கழகத்தில் நரகத்தை அனுபவித்தோம் - சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நெய்மரின் கருத்து

3 புரட்டாசி 2023 ஞாயிறு 17:37 | பார்வைகள் : 11216
பரிஸ் உதைபந்தாட்டக் கழகமான PSG இன் முன்னாள் வீரர் நெய்மர் வெளியிட்ட கருத்து ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
PSG கழகத்தில் இருக்கும் வரை லியோனல் மெஸ்ஸியும் தாமும் நரகத்தை அனுபவித்ததாக நெய்மர் கருத்து வெளியிட்டுள்ளார், தற்போது Al-Hilal கழகத்துக்காக விளையாடி வரும் நெய்மர், O Globo எனும் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “மெஸ்ஸி அர்ஜண்டினாவில் விளையாடும் போது சொர்க்கத்தை போல் உணர்ந்தான். பரிசுக்காக விளையாடும் போது நரகத்தை உணர்ந்தான். நானும் அவனும் நரகத்தை கடந்து வந்துள்ளோம்.” என தெரிவித்தார்.
மேலும், “அவர் விளையாட்டில் அவனால் முடிந்த அனைத்தையும் செய்தான். அவன் எளிதில் கோபமடைபவன். அவனைத்தெரிந்த அனைவருக்கும் அவனது கோபம் குறித்தும் தெரியும். அவன் தோற்றால் கோபமடைபவன். இதனை தான் நிர்வாகம் தவறாக புரிந்துகொண்டுள்ளது!” எனவும் நெய்மர் தெரிவித்தார்.