நாளை நாடெங்கும் கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும் : நடிகர் விஜய் அறிக்கை

21 ஆவணி 2024 புதன் 17:28 | பார்வைகள் : 3424
தமிழக வெற்றிக் கழகம்' கட்சிக் கொடியை அறிமுகம் செய்யவுள்ள நடிகர் விஜய், 'நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும்' என அறிக்கை வெளியிட்டதுடன், நாளை காலை 9:15 மணிக்கு கொடி அறிமுகம் செய்ய உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற தன் ரசிகர் மன்றத்தை, கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக விஜய் மாற்றினார். லோக்சபா தேர்தலுக்கு முன்பே கட்சி துவங்கினாலும், 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என அறிவித்தார். தனி கட்சி துவங்கி விட்டதால், இருக்கும் படங்களை முடித்து, முழுநேரமாக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த விஜய், கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வரும் செப்., 22-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கவுள்ளது. மாநாட்டிற்கு முன்னதாக நாளை (ஆக.,22) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திலேயே புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கை: சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22.