Paristamil Navigation Paristamil advert login

ஆவாரம் பூவில் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்கள்...

ஆவாரம் பூவில் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்கள்...

22 ஆவணி 2024 வியாழன் 10:38 | பார்வைகள் : 936


ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவர மூலிகைகள் எல்லாம் நமக்கு எளிமையாக கிடைக்க கூடியவை. அதில் ஒன்று ஆவாரம்பூ. இந்த ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து சாப்பிடலாம். இந்த பூவை கொதிக்க வைத்து தேநீராக்கி குடிக்கலாம். இந்த ஆவாரம்பூ ஆயுர்வேதத்தில் எப்படி எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

வெதுவெதுப்பான நீரில் பொடியை சேர்த்து தேனுடன் கலந்து மூலிகை தேநீராக்கி குடிக்கலாம். இது நல்ல மலமிளக்கியாக செயல்படும். ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு தீர்வாகிறது.

ஆவாரம் பூ பொடி, பனங்கருப்பட்டி, ஏலக்காய் விதைகள் சேர்த்து பானமாக்கி குடிக்கலாம். தேனும் அளவாக பயன்படுத்தலாம். இது தாகத்தை தணிக்கும் பானமாகவும் இருக்கும். ஆவாரம்பூவின் தாவர சாறுகள் நீரிழிவு நோய்க்கு பலனளிக்கும் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் ஆவாரம்பூவின் சாற்றையும் குடிக்கலாம்.

ஆவாரம் பூ பொடியை பாசிப்பயறு மாவு மற்றும் கடலை மாவில் கலந்து விடவும். இதில் பன்னீர் சேர்த்து குழைத்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால் சருமம் ரோஜா நிறம் போல் ஜொலிக்கும் என்பது உண்மை.

ஆவாரம் பூ பானம் சிறுநீர் கடுப்பு இருக்கும் போது அதை குறைக்க செய்கிறது. இதனுடைய வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது அதை தணிக்க ஆவாரம் பூ பயன்படுகிறது. ஆவாரம் பூக்களை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடித்துவருவதன் மூலம் காய்ச்சல் குறையும் என்று சொல்லப்படுகிறது.

ஆவாரம் பூ சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதோடு சருமத்தில் உண்டாகும் காயங்களை சரி செய்யவும் உதவுகிறது. காயங்களை சுத்தம் செய்யும் போது ஆவாரம் பூ வேர் மற்றும் இலைகளை நீரில் கொதிக்க வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது காயத்தை கழுவி வந்தால் காயம் விரைவில் ஆறும். சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைக்கும்.

பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் ஆவாரம் பூ பொடி, வெந்தயப்பொடி மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் சரிசமமாக கலந்து உச்சந்தலையில் தடவி விடவும் 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை ஷாம்பு கொண்டு அலசி எடுத்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்..ஆவாரம் பூ விதைகள் மற்றும் கரிசலாங்கண்ணி இலைகள் சேர்த்த எண்ணெய் இளநரை பிரச்சனைக்கு உதவும்.

ஆவாரம் பூ பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது எனினும் மருத்துவர் அறிவுரை பெற்று இதனை பயன்படுத்துவது சால சிறந்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்