Paristamil Navigation Paristamil advert login

Marcel Petiot : 60 பேரை கொடூரமாக கொன்ற ‘தொடர் கொலைகாரன்!’ (நேற்றைய தொடர்ச்சி)

Marcel Petiot : 60 பேரை கொடூரமாக கொன்ற ‘தொடர் கொலைகாரன்!’ (நேற்றைய தொடர்ச்சி)

3 மார்கழி 2021 வெள்ளி 10:30 | பார்வைகள் : 23222


 தீயணைப்பு படையினர் Marcel Petiot வீட்டுக்குச் சென்றனர். அங்கு குசினிக்குள் இருந்தெல்லாம் எந்த புகையும் வரவில்லை. மாறாக வீட்டின் தரை தளத்தில் இருந்து புகை வந்துகொண்டிருந்தே உள்ளது.

புகை என்றால் தனியே புகை இல்லை. ஒரு கெட்ட வாடையுடன் வந்த அந்த புகையால் தீயணைப்பு படையினர் மூக்கை பொத்திக்கொண்டனர்.

தரை தளத்துக்கு சென்று பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு, ஒரு கிடங்கு வெட்டப்பட்டு கட்டைகள் போடப்பட்டு பேக்கரி போன்ற அமைப்புடன் ஒரு சிறிய சுடுகாடே இருந்துள்ளது.

அதோடு பல மனித சடலங்களும், உடல் பாகங்களும் இருந்தன. தீயணைப்பு படையினருக்கு விடயம் புரிந்தது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர்.

சடலங்களோடு பல ‘சூட்கேஸ்’ பெட்டிகளும் இருந்துள்ளன. அதற்குள் கொல்லப்பட்டவர்களின் உடமைகள் துணிகள் மற்றும் பொருட்களும் இருந்துள்ளன.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஏழு மாதங்கள் விசாரணைகள் தொடர்ந்தன. அதற்குள்ளாக Marcel Petiot எங்கேயோ ஓடி ஒளிந்துகொண்டுண்டிருந்தான். அவனை கைது செய்வது ஒரு பக்கம் இருக்க, இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன.

இதில் வீட்டின் தரை தளத்தில் இருந்த சுடுகாடு போன்ற இடத்தில் பல சடலங்களை Marcel Petiot எரிந்துள்ளமை தெரியவந்துள்ளது. மொத்தமாக 60 பேரினை அவன் கொன்று எரித்திருக்கலாம் என காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்தனர்.

அதே 1944 ஆம் ஆண்டின் இறுதியில், பரிஸ் மெற்றோ நிலையம் ஒன்றில் வைத்து Marcel Petiot கைது செய்யப்பட்டான். அப்போது அவன் Henri Valeri என தனது பெயரை மாற்றிக்கொண்டு ஆள் மாறாட்டம் செய்துகொண்டு திரிந்துள்ளான்.

அவனிடம் ஒரு பிஸ்ட்டல் துப்பாக்கியும், 31.700 பிராங்குகள் ரொக்கமும், 50 போலி அடையாள அட்டைகளும் இருந்துள்ளன.

விசாரணைகளின் போது, ‘நான் ஒரு அப்பாவி. பிரான்சின் எதிரிகளை தான் நான் கொலை செய்தேன்!” என வாக்குமூலம் அளித்தான்.

உங்களது சேவை நாட்டுக்கு தேவையில்லை என அவனை La Sante சிறைச்சாலைக்கு மரண தண்டனைக் கைதியாக அனுப்பி வைத்தது நீதிமன்றம்.

1946 ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி அன்று அவனுக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

(சுபம்)

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்