Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம்

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம்

2 புரட்டாசி 2023 சனி 10:09 | பார்வைகள் : 4167


இலங்கையில் இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்தப் போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“கோட்டா கோ ஹோம், ரணில் கம் பெக் என்பதே முதலாவது போராட்டத்தின் இலக்காக இருந்தது. இதில் “கோட்டா கோ ஹோம்” என்பது மட்டுமே வெளியில் தெரிந்தது. “ரணில் கம் பெக்” என்பது திரைமறைவில் இடம்பெற்று வந்தது.

2ஆவது போராட்டம் “ரணில் கோ ஹோம்” என வராது. அது வேறு வடிவில் வரும். அதாவது, ரணில் ஆட்சியில் இருக்கும்போது வர்க்க வேறுபாட்டால் ஏற்படும் போராட்டமாக அது அமையும். பட்டினி, வேலையின்மை உள்ளிட்டவற்றால் மக்கள் வீதியில் இறங்கக்கூடும். மக்கள் உணவுகளைக் கொள்ளையடிக்கலாம், சுப்பர் மார்க்கெட்டிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்படலாம். செல்வந்தர்களின் சொத்துகள் சூறையாடப்படலாம்.

உணவை எப்படிப் பதுக்குவது, அதன்மூலம் எப்படி போராட்டத்தை ஏற்படுத்துவதென்பது எல்லாம் சி.ஐ.ஏ. புத்தகத்தில் உள்ளது. விக்டோரியா நூலண்டால் (அமெரிக்க இராஜதந்திரி) இயக்கப்படும் போராட்டத்தின் 2ஆவது பாகமாகவே இது இருக்கும்.

முதலாவது போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கொலை செய்துவிட்டு லிபியாவில் போன்று, சர்வதேச தலையீட்டுடன் இடைக்கால ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. அது சரிவரவில்லை. அதனால்தான் தற்போது அடுத்த திட்டம் வருகின்றது.

முதலாவது போராட்டத்தின்போது இருப்பவர்கள் வீதிக்கு வந்தனர். 2 ஆவது போராட்டத்தில் விவசாயிகள், வேலை இழந்தவர்கள் எனப் பலரும் வருவார்கள்.

முதலாவது போராட்டத்தின்போதும் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு இருந்தது. அவர் மட்டுமே போராட்டக் களத்துக்குச் செல்லக்கூடியதாக இருந்தது.

அமெரிக்கத் தூதுவருக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர் அமெரிக்காவின் கைப்பாவையாக மாறியுள்ளார். 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவுக்கு வடக்கில் எப்படி 100 வீத வாக்குகள் கிடைக்கப்பெற்றன. லிபியாவில் இடைக்கால அரசு அமைந்தபோது இராணுவத் தளபதிகள் உள்வாங்கப்பட்டனர். இலங்கையில் அவ்வாறு நடந்திருந்தால் பொன்சேகாவும் இடைக்கால அரசியல் இருந்திருப்பார். 2ஆவது போராட்டத்துக்கும் பொன்சேகா பயன்படுத்தப்படலாம்.

எதிர்வரும் நவம்பர் மாதமளவில் உணவு நெருக்கடி ஏற்படும். நீர் இல்லை. வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விழிப்பாக இருக்க வேண்டும்.” – என்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்