Paristamil Navigation Paristamil advert login

அதிகப்படியான இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா..?

அதிகப்படியான இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா..?

8 புரட்டாசி 2024 ஞாயிறு 11:22 | பார்வைகள் : 813


உலகில் பெரும்பாலானோர் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சர்க்கரை நோயை டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் டைப் 1 சர்க்கரை நோய் சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் வராது என்றாலும், டைப் 2 நமது தினசரி வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரையை உட்கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் மற்றும் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது.

இதுவே டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயத்தை தூண்டுகிறது. குறிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் தீங்கு விளைவிக்கும். சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதும், சரிவிகித உணவைப் பின்பற்றுவதும் நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைப்பதற்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது

மிட்டாய்கள் முதல் பேஸ்ட்ரிகள் வரை சர்க்கரையை சேர்ப்பது கட்டாயமாகியிருக்கிறது. இதுபோன்ற பொருட்களில் சர்க்கரையை தவிர்ப்பது கடினம். உடல்நலம், குறிப்பாக நீரிழிவு நோய் பற்றிய கவலைகள் அதிகரித்து வருவதால், அதிகப்படியான இனிப்புகளை உட்கொள்வது உண்மையில் இந்த நாட்பட்ட நிலையை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்குமா என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். சர்க்கரை உட்கொள்வதற்க்கும், நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்பைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

அதிக சர்க்கரை சாப்பிடுவது நேரடியாக நீரிழிவு நோயை உண்டாக்குகிறதா என்பது மக்களிடையே பொதுவான கேள்விகளில் ஒன்றாகும். இதற்கு எளிதாக “ஆம்” அல்லது “இல்லை” என்று செல்வது தான் உண்மையில் கஷ்டமான விஷயம். அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, டைப் 1 நீரிழிவு என்பது ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும், இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்குகிறது, மேலும் இது சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படாது. மறுபுறம், டைப் 2 நீரிழிவு நோய், மிகவும் பரவலாக உள்ளது, இது உணவுமுறை உள்ளிட்ட வாழ்க்கை முறை காரணிகளுடன் தொடர்புடையது.

சர்க்கரை அதிகம் உள்ள உணவு, உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது, இது டைப் 2 நீரிழிவு நோய்க்கான குறிப்பிடத்தக்க ஆபத்தான காரணியாக பார்க்கப்படுகிறது. அதிகப்படியான சர்க்கரை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. குறிப்பாக முக்கிய உறுப்புகளைச் சுற்றியுள்ள உள்ளுறுப்பு, ழுப்பு வடிவத்தில் இருக்கும். இந்த வகை கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையது, உடலின் செல்கள் இன்சுலினுக்குக் குறைவாகப் பதிலளிக்கும் நிலையில், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதற்கும், இறுதியில், டைப் 2 நீரிழிவுக்கும் வழிவகுக்கிறது.

சர்க்கரையின் முக்கிய ஆதாரங்களில் ஒன்று சர்க்கரை பானங்கள் ஆகும். சர்க்கரை பானங்களைத் தொடர்ந்து உட்கொள்ளும் நபர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஜர்னல் ஆஃப் டயாபிடிஸ் இன்வெஸ்டிகேசன் நடத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சர்க்கரை பானங்களை உட்கொள்வது கூட ஆபத்தை 26% அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், சர்க்கரை பானங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்கின்றன, இது காலப்போக்கில் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகிறது. இந்த பானங்கள் எந்த ஊட்டச்சத்தையும் வழங்குவதில்லை, நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்காமல்,டை அதிகரிப்புக்கு மட்டும் பங்களிக்கின்றன. சர்க்கரை பானங்களை கட்டுப்படுத்துவது நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதில் ஒரு முக்கியமான படியாகும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் இயற்கையான சர்க்கரைகளையும் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரையையும் வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியமான ஒன்று. மிட்டாய்கள், வேகவைத்த பொருட்கள் மற்றும் இனிப்பு தானியங்கள் போன்ற சர்க்கரை அதிகமாக உள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளும் போது தீங்கு விளைவிக்கும். சர்க்கரைகள் அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோயுடன் போராடும் இன்சுலின் எதிர்ப்பின் அளவை அதிகரிக்க செய்யும்.

உடலின் செல்கள் இன்சுலினுக்கு சரியாக பதிலளிக்கத் தவறும்போது இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகும். இதனை ஈடுசெய்ய கணையம் அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது, ஆனால் காலப்போக்கில், இது அதிக இரத்த சர்க்கரை அளவு மற்றும் இறுதியில், டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.

அதிகப்படியான சர்க்கரையை எடுத்துக் கொள்வது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், சர்க்கரையானது இயல்பாகவே மோசமானது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய விஷயம் மிதமான மற்றும் சீரான உணவை பராமரிப்பது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிவுரைப்படி, உங்கள் மொத்த தினசரி ஆற்றல் தேவையில் 10% க்கும் குறைவான அளிலான சர்க்கரை உணவையும், கூடுதல் ஆரோக்கிய நன்மைகளுக்காக 5% க்கும் குறைவாக இருக்கும் சர்க்கரையையும் எடுத்து கொள்ளலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்