பரிஸ் : காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த கொள்ளையன்! - மருத்துவமனையில்..!!

18 கார்த்திகை 2024 திங்கள் 18:22 | பார்வைகள் : 5266
19 வயதுடைய கொள்ளையன் ஒருவன், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க, மூன்றாவது தளத்தில் இருந்து குதித்துள்ளார். அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 17, நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பம் மத்திய பரிசின் rue Saint-Martin வீதியில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் இருவர் (வயது 19 மற்றும் 23) பல்வேறு பொருட்களை மூட்டைக்கட்டிக்கொண்டு இருந்துள்ளனர். அருகில் வசிப்பவர்களில் ஒருவர் காவல்துறையினரை அழைக்க, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
காவல்துறையினர் வருகையை அறிந்த இரு கொள்ளையர்களும் தப்பிச் செல்ல முற்பட்டனர். அவர்களில் ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்துள்ளார். படுகாயமடைந்த அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.