Paristamil Navigation Paristamil advert login

அல்லு அர்ஜூனனிடம் நெல்சன் வைத்த கோரிக்கை..

அல்லு அர்ஜூனனிடம் நெல்சன் வைத்த கோரிக்கை..

25 கார்த்திகை 2024 திங்கள் 09:43 | பார்வைகள் : 3634


அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் நெல்சன் ஒரு அறிவுரை கூறினார். அந்த அறிவுரையை அல்லு அர்ஜுன் ஏற்றுக் கொள்வதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள ’புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று சென்னையில் புரமோஷன் நிகழ்ச்சி நடந்த போது பல திரையுலக பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர். அப்போது, நெல்சன் மேடைக்கு வந்து பேசிய போது, அல்லு அர்ஜுன் அவர்களுடன் ஒரு திரைப்படம் இயக்க விருப்பம் தான், ஆனால், அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

அதற்கு அல்லு அர்ஜுன் ஓகே சொன்ன போது, நெல்சன் "ஒரு சின்ன விஷயம் உங்களிடம் சொல்ல வேண்டும். நான் முதல் முறையாக அல்லு அர்ஜுன் அவர்களிடம் படம் பண்ணுவதற்காக கதை சொல்ல போன போது, எனக்கு தெலுங்கு தெரியாதே எப்படி சமாளிக்க போகிறேன் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் மிகவும் அழகாக தமிழ் பேசினார். அப்போதுதான் என் மனதுக்கு ஒன்று தோன்றியது. அல்லு அர்ஜுன் அவர்கள் நேரடியாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க வேண்டும். அதேபோல், பாட்னாவில் அவருக்கு வந்த கூட்டத்தையும் பார்த்தேன். நேரடியாக அவர் ஒரு ஹிந்தி படமும் நடிக்க வேண்டும்.

நேரடியாக தெலுங்கு படம் நடிப்பது போல் தமிழ் படம் மற்றும் ஹிந்தி படத்தையும் அவர் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்." என்று நெல்சன் கூறினார். அதற்கு, அல்லு அர்ஜுன் ஓகே என்று தலையாட்டினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்