இலங்கையில் முதலாம் தர மாணவர்களுக்கு 30ஆம் திகதி பாடசாலை ஆரம்பம் - கல்வி அமைச்சு

31 மார்கழி 2024 செவ்வாய் 08:31 | பார்வைகள் : 9598
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளிலும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்கிழமை (31) அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரச பாடசாலைகளின் புதிய தரம் ஒன்று மாணவர்களுக்கு ஜனவரி 30 ஆம் திகதி வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை விடுமுறையின் பின்னர் நாளை வியாழக்கிழமை மீள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சகல பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் வியாழக்கிழமை (02) ஆரம்பமாகி, எதிர்வரும் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
இதேவேளை இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் 2025 மார்ச் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை நேர அட்டவணை என்பதை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.