RCB அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

14 மாசி 2025 வெள்ளி 09:51 | பார்வைகள் : 510
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி, 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனுக்கான புதிய கேப்டனாக ரஜத் படிதாரை(Rajat Patidar) நியமித்துள்ளது.
முன்னாள் கேப்டன் விராட் கோலி டிசம்பர் மெகா-ஏலத்திற்கு பிறகு மீண்டும் கேப்டன் பதவியை ஏற்பார் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த மெகா-ஏலத்திற்கு முன்பு RCB அணியால் தக்கவைக்கப்பட்ட ரஜத் படிதார், சையத் முஷ்டாக் அலி கோப்பை (டி20) மற்றும் விஜய் ஹசாரே கோப்பை (ஒருநாள்) போட்டிகளில் மத்திய பிரதேச அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர்.
RCB அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு அணியின் முன்னணி வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோலி இது தொடர்பாக கூறுகையில், “ரஜத், முதலில் உனக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன், இந்த அணியில் நீ வளர்ந்த விதத்தையும், உன் திறமையையும் பார்த்து, இந்தியா முழுவதும் உள்ள RCB ரசிகர்களின் இதயங்களில் நீ ஒரு இடத்தைப் பிடித்துள்ளாய். உன்னை விளையாட்டை பார்க்க அவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள், எனவே இது மிகவும் தகுதியானது.
நானும் மற்ற அணி உறுப்பினர்களும் உனக்கு உறுதுணையாக இருப்போம், இந்த கேப்டன் பதவியில் நீ மேலும் வளர எங்களின் முழு ஆதரவும் உனக்கு இருக்கும் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்." என விராட் கோலி தெரிவித்துள்ளார்.