"ஜெர்மன் அரசின் நடைமுகளை பிரான்சும் பின்பற்ற வேண்டும்" Bruno Retailleau.

17 மாசி 2025 திங்கள் 08:08 | பார்வைகள் : 2567
ஐரோப்பிய ஒன்றியம் 'Schengen' ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளுக்கு இடையில் எல்லைகளை மூடுவது, கெடுபிடியான சோதனைகளை கையாள்வது ஒப்பந்தத்திற்கு முரணானது என தெரிவித்துள்ள நிலையில், ஜெர்மன் தன் எல்லைகளை பெப்ரவரி 12 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு மூடவுள்ளதாக அதிபர் Olaf Scholz அறிவித்துள்ளார்.
தங்களின் எல்லைகளை மூடிய பின்னர் சுமார் 47,000 குடியேற்ற வாசிகளை நாட்டுக்குள் வரமுடியாமல் தடுத்துள்ளதுடன், 1,900 கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் இது தமது நாட்டிற்கு சிறந்த பாதுகாப்பு எனவும் ஜெர்மன் அதிபர் Olaf Scholz மேலும் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் வரும் பெப்ரவரி 23-ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்த அதிபராக எதிர்பார்க்கப்படும் இன்றைய எதிர்கட்சித் தலைவரும், பழமைவாதிகளின் தலைவருமான Friedrich Merz "புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட அனைத்து ஆவணமற்ற வெளிநாட்டினரையும் தடுத்து நிறுத்தி அவர்களின் நாடுகளுக்கு திரும்பி அனுப்பவேண்டும், நிரந்தர எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும் இதுவே என் விருப்பம்" என கூறியுள்ளார்.
இந்த கட்டுப்பாடுகளை கோடிட்டுக் காட்டியுள்ள பிரான்ஸ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் Bruno Retailleau "பிரான்ஸ் தேசமும் தன் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜெர்மன் அரசின் நடைமுகளை கடைப்பிடிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.