சைபர் குற்றவாளிகள் கணக்குகளை முடக்குவதில் வங்கிகள் அலட்சியம்

20 மாசி 2025 வியாழன் 03:13 | பார்வைகள் : 740
சைபர் குற்றவாளிகளின் கணக்குகளை முடக்குவதில் வங்கிகள் அலட்சியம் செய்வதாக, மத்திய அரசுக்கு, தமிழக போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
ஆன்லைன் வாயிலாக பண மோசடி உள்ளிட்ட, சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, '1930' என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, போலீசார் அறிவித்து உள்ளனர்.
அதன்படி புகார் பதிவு செய்ய, சென்னையில் செயல்படும் மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 24 மணி நேரமும் செயல்படும், 1930 எண்களுக்கான கட்டுப்பாட்டு அறையும் உள்ளது.
இதில் புகார் பதிவு செய்த உடனேயே, வங்கிகளுக்கு பாதிக்கப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் இருந்து, சைபர் குற்றவாளிகள் எந்த வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி உள்ளனர் என்ற விபரம் சென்று விடும்.
இத்தகவல் கிடைத்த அடுத்த வினாடியே, சைபர் குற்றவாளி பயன்படுத்திய வங்கிக் கணக்களில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் செய்ய, அந்த வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என, சைபர் குற்றப்பிரிவு போலீசார், வங்கிகளுக்கு பலமுறை கடிதம் எழுதிஉள்ளனர்.
ஆனால், வங்கி அதிகாரிகள் அலட்சியம் செய்வதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, 'சைபர்' குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
வங்கிகள் மிகவும் காலதாமதாகவே, சைபர் குற்றவாளிகளின் கணக்குகளை முடக்கிறது. அலுவல் நேரங்களில் மட்டுமே புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்கின்றனர்.
சில சமயங்களில், முதல் நாள் பதிவான புகார் மீது, மறுநாள் தான் சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திய வங்கி கணக்குகளை முடக்குகின்றனர். அதற்குள் அவர்கள் பணத்தை எடுத்து விடுகின்றனர்.
அதன் பின்னர், அவர்களை கைது செய்து பணத்தை மீட்டு, பாதிக்கப்பட்ட நபருக்கு தருவது பெரும் சவாலாக உள்ளது. இதனால், வங்கி அதிகாரிகளின் அலட்சியம் குறித்து, மத்திய நிதி அமைச்சகம் மற்றும் தகவல் தொடர்பு துறைக்கு கடிதம் எழுதி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.