இலங்கையில் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை குறித்த விசேட அறிவிப்பு

21 மாசி 2025 வெள்ளி 16:35 | பார்வைகள் : 1465
இலங்கையில் 24 மணி நேர ஒரு நாள் சேவை கடவுச்சீட்டுகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், “குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரே நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக மட்டுமே 24 மணி நேர சேவையை இயக்குகிறது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட நீண்டகால கடவுச்சீட்டு தாமதங்களுக்கு தீர்வாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் தலைமை அலுவலகத்தை 24 மணி நேரமும் திறக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் மூலம், நேற்று கடவுச்சீட்டுகளைப் பெற வந்த வாடிக்கையாளர்களின் நீண்ட வரிசையில் குறிப்பிடத்தக்க அளவு குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம், அரசாங்க வேலை நாட்களில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்க திறந்திருக்கும் நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.