இந்திய அணியை எச்சரிக்கும் யுவ்ராஜ் சிங்

22 மாசி 2025 சனி 09:24 | பார்வைகள் : 141
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பாகிஸ்தான் அணியின் ஒரு வீரர் நினைத்தாலும் நம்மை வீழ்த்தி விட முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் எச்சரித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி, நாளை துபாயில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிக்கு இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் தமது அணி வீரர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
அவர் பாகிஸ்தான் அணி குறித்து கூறுகையில், "போட்டி துபாயில் நடைபெறுவதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதில் முன்னிலையில் உள்ளது. ஏனெனில், அவர்கள் அங்கு அதிகமான போட்டிகளை விளையாடி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொள்கிறார்கள்.
இந்திய அணியில் நிறைய வெற்றியாளர்கள் உள்ளனர் என்ற ஷாகீன் அஃப்ரிடியின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், பாகிஸ்தான் அணியில் வெற்றியாளர்கள் குறைவாக இருந்தாலும், ஒரு வீரர் நினைத்தால் கூட போட்டியை கைப்பற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.