மாணவர்கள் நலனில் ஸ்டாலினுக்கு அக்கறை வராது: தினகரன்

25 மாசி 2025 செவ்வாய் 03:23 | பார்வைகள் : 574
மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை வரவிடமாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளதை காட்டுகிறது ''என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் குற்றம் சாட்டினார்.
ராமநாதபுரத்தில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜெ., கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை திராவிட மாடல் அரசு முடக்கிவிட்டது. 4 ஆண்டு கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை.
மாணவர்கள் விரும்பும் 3வது மொழியை கற்று அறிவை வளர்க்க வழிவகை செய்கிறது. அதற்கு ரூ.10ஆயிரம் கோடி மத்திய அரசு தந்தாலும் மும்மொழி கொள்கையை தமிழகத்தில் வர விடமாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளது தமிழக மாணவர்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனை ஆளுங்கட்சி ஆதரவுடன் தினமும் நடக்கிறது.முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கிறார்.
இதனால் தி.மு.க., குடும்ப கட்சி வளர்கிறது. பிரதமர் மோடி ஆட்சியில் மதக்கலவரங்கள் நடக்கவில்லை. அவர்களது நல்ல திட்டங்களை தி.மு.க., அரசு மூடி மறைக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி அங்கு சென்றதால் பிரச்னை ஏற்பட்டது.
தமிழகத்தில் ஜாதி, மதக்கலவரத்தை துாண்டிவிட்டு அரசியல் செய்ய நினைக்கின்றனர். மக்கள் உஷாராக இருக்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.