தமிழக லோக்சபா தொகுதிகள் குறைப்பு பச்சை பொய்

27 மாசி 2025 வியாழன் 05:09 | பார்வைகள் : 158
தன்னுடைய ஆட்சியின் அவலங்கள் வெளிப்படக்கூடாது என்பதற்காக, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் புதிய பிரச்னைகளை உருவாக்கி, மக்களை திசை திருப்புகின்றனர். மறுசீரமைப்பு என்ற புதிய பிரச்னையை உருவாக்கி, கட்சிகளுடன் முதல்வர் கூட்டம் நடத்து கிறார். தென் மாநிலங்களில் லோக்சபா தேர்தலில், ஒரு சீட் கூட குறையாது என, பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஆனால், தமிழக முதல்வர், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொய் சொல்லி துரோகம் இழைக்கிறார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்துவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 2024ம் ஆண்டு, பா.ஜ.,வுக்கு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஆண்டு. மோடி, 2024ம் ஆண்டில், மூன்றாவது முறையாக நாட்டின் தலைமை பொறுப்பேற்றார்.
கடந்த 2024ல் தான், முழு 'மெஜாரிட்டி' உடன், ஒடிசாவில் ஆட்சி அமைத்தோம். நீண்ட காலத்துக்கு பிறகு ஆந்திராவிலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.
வகுப்புவாதம் வேண்டாம்
ஹரியானா, டில்லி, மஹாராஷ்டிராவில் நடந்த சமீபத்திய தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். 2025ம் ஆண்டு டில்லியில் வெற்றியுடன் துவங்கியுள்ளோம். அதே போல, 2026ல் தமிழகத்திலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி துவங்கப்போகிறது.
தமிழகத்தில் தி.மு.க.,வின் தேசவிரோத, மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் நெருங்கிவிட்டது.
தொண்டர்கள் எல்லாரும் உற்சாகத்துடன், புத்துணர்ச்சியுடன், அதிக தெம்புடன் கால் எடுத்து வையுங்கள்; தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி, அடுத்து உருவாவது உறுதி.
அப்படி உருவாகும் ஆட்சி, புதிய யுகத்தை உருவாக்கும். வகுப்புவாதம், பிரிவினைவாதம் என்ற சிந்தனை முடிவுக்கு கொண்டு வரப்படும். ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும். தமிழகத்தில் வேரூன்றி இருக்கும், தேசியத்துக்கு எதிரான சக்தி, வேரோடு பிடுங்கி எறியப்படும்.
புதிய ஆட்சியில் புதிய எண்ணங்கள், திட்டங்கள், சிந்தனை, எழுச்சிகள் இருக்கும். பா.ஜ.,வின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில், தனி முத்திரை பதிக்கப்படுகிறது.
சுதந்திர இந்தியாவுக்கு பின் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை போற்றும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். ஜனநாயகத்தின் கோவிலான பார்லிமென்டில், செங்கோலை வைத்து அலங்கரித்தவர் பிரதமர். அதைவிட தமிழுக்கு யாரால் சிறப்பு செய்ய முடியும்?
கள்ளச்சாராயம்
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் சீரழிந்து உள்ளது. பல்கலை போன்ற மிக முக்கிய இடங்களில் கூட, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது மோசமான முன் உதாரணம். வேங்கை வயலில் ஒரு சம்பவம் நடந்து, 700 நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
கள்ளச்சாராயம் புரையோடி கிடக்கிறது. சாராயம் காய்ச்சுபவர்களை பிடிக்கவில்லை; மாறாக புகார் அளிப்பவர்கள் கொல்லப்படுகின்றனர். தேச விரோத நிந்தனை செய்யும் தி.மு.க., ஆட்சியில் உள்ளது.
கடந்த 1998ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவர்களை, போலீஸ் பாதுகாப்போடு அழைத்துச்செல்லும் அவலநிலை இங்கு இருக்கிறது.
போதை பொருள் விற்பனை, ஆட்சியாளர்களின் உறுதுணையோடு நடக்கிறது. இதே போல, கனிமவளம், மணல் கொள்ளையும் ஆட்சியாளர்களின் முழு அதிகாரத்துடன் நடக்கிறது. ஊழலில் தி.மு.க., தலைவர்கள், 'மாஸ்டர் டிகிரி' பெற்றவர்களாக உள்ளனர்.
ஒரு தலைவர் வேலை வாங்கித்தர பணம் வாங்குவதில் சாதனை படைத்துள்ளார்.
செம்மண் கடத்தல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு, நிலக்கரியில் மிகப்பெரிய ஊழல், விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 6,000 கோடி ரூபாய் ஊழல் என, ஒவ்வொரு தலைவரும் ஊழல் செய்துள்ளனர்.
குறிப்பாக, '2ஜி' ஊழல் இன்னும் முடியவில்லை. ஊழல் பெருச்சாளிகள், ஊழலின் உச்சத்தில் இருப்பவர்களை தேடி, தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்கிறது. இந்த ஊழல்வாதிகளால் தமிழகம் துன்பத்திலும், துயரத்திலும் இருக்கிறது.
ஒரு சீட் கூட குறையாது
தன்னுடைய ஆட்சியின் அவலங்கள் வெளிப்படக்கூடாது என்பதற்காக, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் புதிய பிரச்னைகளை உருவாக்கி, மக்களை திசை திருப்புகின்றனர். மறுசீரமைப்பு என்ற புதிய பிரச்னையை உருவாக்கி, கட்சிகளுடன் முதல்வர் கூட்டம் நடத்துகிறார்.
தென் மாநிலங்களில் லோக்சபா தேர்தலில், ஒரு சீட் கூட குறையாது என மோடி உறுதியளித்துள்ளார். ஆனால், தமிழக முதல்வர், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொய் சொல்லி துரோகம் இழைக்கிறார்.
நான் புள்ளி விவரங்களுடன் இங்கு நிற்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு காரணமாக மக்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்று பொய் சொல்லும் ஸ்டாலின், எதன் அடிப்படையில் என்று பதில் சொல்ல வேண்டும்.
மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கிறேன். மஹாராஷ்டிரா, ஹரியானா வெற்றியை தாண்டி மிகப்பெரிய வெற்றியை, தமிழகத்தில் பா.ஜ., பெறப்போகிறது. வருங்காலங்களில் பா.ஜ., கட்சி அலுவலகங்கள் மக்கள் கூடும் இடமாக, பிரச்னைகளை கவனித்து தீர்வு தரும் இடமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்துக்கு நிதி வாரி
வழங்கிய மத்திய அரசு'அமித் ஷா பேசுகையில், ''கடந்த, 2004 - 14ம் ஆண்டு வரையிலான தி.மு.க., கூட்டணி காங்., ஆட்சியில், பல திட்டங்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தொகை, ஒரு லட்சத்து, 52 ஆயிரத்து, 900 கோடி ரூபாய். அதே 2014-24 மோடி ஆட்சியில், 5 லட்சத்து, 8,337 கோடி ரூபாய் என, ஐந்து மடங்காக தரப்பட்டுள்ளது.''தவிர, கட்டமைப்பு மேம்பாட்டுக்கென, 1 லட்சத்து, 43 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு, 2,000 கோடி ரூபாய், மீன் வளத்துறைக்கு, 6,400 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை என பல்வேறு நலத்திட்டங்களுக்கு, ஏராளமான தொகையை வாரி வழங்கியுள்ளது, பா.ஜ., அரசு. ஆனால், மத்திய அரசு நிதி தருவதில்லை என்று, ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார் ,'' என்றார்.