கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சவாலாக அமைந்த gaz hilarant!!

2 பங்குனி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 1270
கழிவுகளை அழிக்கும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு gaz hilarant குடுவைகள் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இளைஞர்களிடையே பெரும் மோகப்பொருளாக மாறியுள்ள gaz hilarant, பிரான்சில் அதிகளவில் விற்பனையாகின்றன. குடுவைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் இவ்வகை வாயுக்களை உட்கொள்ளுவதால் ஒருவித பரவச நிலையை இளைஞர்கள் அனுபவிக்கின்றனர். போதைப்பொருளுக்கு இணையான இதனை கட்டுப்படுத்த அரசு பல விதங்களில் போராடி வருகிறது.
இந்நிலையில், பிரான்சில் உள்ள வீட்டுக் கழிவுகளை அழிக்கும் நிலையங்களில் (site de traitement des ordures ménagères) இவ்வகை குடுவைகள் பெரும் சேதங்களை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Issy-les-Moulineaux (Hauts-de-Seine) நகரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 3,500 வெடிப்பு சம்பவங்கள் இதுபோல் இடம்பெற்று பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. வாயு குடுவைகளில் மீதமிருக்கும் வாயுக்கள் அதி உச்ச வெப்பத்தை அடைந்தவுடன் வெடித்துச் சிதறுகின்றன. இதனால் கட்டிடங்கள், இயந்திரங்கள் சேதமடைகின்றன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Issy-les-Moulineaux நகர கழிவு அழிப்பு நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 1,700 தொன் கழிவுகள் அழிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மணிநேரமும் மிகவும் முக்கியமானதாகும். இல்லை என்றால் மறுநாள் இரண்டுமடங்காக கழிவுகள் குவிந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்நிலையில், ஊழியர்கள் இந்த குடுவைகளுடன் மல்லுக்கட்டுவதாக தொழிற்சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
Saint-Ouen (Seine-Saint-Denis) நகரில் உள்ள கழிவு அழிக்கும் நிலையத்தில் சில நாட்கள் முன்பு ஏற்பட்ட பாதிப்பினை புகைப்படத்தில் காணலாம்.
இதே நிலை Caen (Calvados) மற்றும் Besançon (Doubs) போன்ற நகரங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களிலும் பதிவாகி வருகின்றன.
இந்த புதிய பிரச்சனையை அரசு சட்டம் ஒன்றை இயற்றுவதூடாக மாற்ற முடியும் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இவ்வகை gaz hilarant உட்கொள்ளுவது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பதாகும். பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.