Paristamil Navigation Paristamil advert login

சொன்னீங்களே... செஞ்சீங்களா எதிர்வினையாற்றும் தி.மு.க., தேர்தல் அறிக்கை!

சொன்னீங்களே... செஞ்சீங்களா எதிர்வினையாற்றும் தி.மு.க., தேர்தல் அறிக்கை!

2 பங்குனி 2125 வெள்ளி 08:49 | பார்வைகள் : 125


பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக, தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், கடந்த, 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்கள், மாதம், 12 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியத்தில், 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். உடற்கல்வி - 3,700, ஓவியம் - 3,700, கம்ப்யூட்டர் அறிவியல் - 2,000, தையல் - 1,700 ஆசிரியர்கள் உட்பட இசை, தோட்டக்கலை, கட்டட கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து, பகுதிநேர ஆசிரியர் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:


தி.மு.க., தேர்தல் அறிக்கை எண்:153ல், 'அரசின் அனைத்து துறைகளிலும், 10 ஆண்டுக்கு மேல் தற்காலிகமாக பணிபுரிபவர்கள், நிரந்தரம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதி எண். 181ல், 'பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என தனியாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த, 2021, செப்,. 16ல் நடந்த அரசுத்துறை செயலர்கள் மட்டத்திலான ஆய்வுக்கூட்டத்தில், 'தேர்தல் வாக்குறுதிகளை அரசாணையாக்க வேண்டும்' என முதல்வர் கூறினார்.

தேர்தலுக்கு முன், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, 2021 பிப்., 1ல், தர்மபுரி மற்றும் 6ம் தேதி, கன்னியாகுமரியில் நடந்த பிரசாரத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றார். 'தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 100 நாட்களில் நிறைவேற்றப்படும்' என நம்பிக்கை ஏற்படுத்தினார்.

இவ்வாறு பகுதி நேர ஆசியர்களின் ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்தியும், இதுவரை அரசாணை வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிட்டால், அடுத்தாண்டு தேர்தல் வந்துவிடும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அந்த ஸ்டாலின் கேட்டார்...இந்த ஸ்டாலின் செய்தாரா?

கடந்த, 2021 பிப்.,14ம் தேதி, மயிலாடுதுறையில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்,' பிரசாரத்தில், ஸ்டாலின் என்ற பெயர் கொண்ட பகுதி நேர ஆசிரியர், 'தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்தார். 'அந்த ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையை, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த ஸ்டாலின் நிறைவேற்றுவேன்,' என, நம்பிக்கையளித்தார். ஆனால், இதுவரை நிறைவேற்றாதது ஏமாற்றமளிக்கிறது, எனவும், செந்தில்குமார் கூறினார்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்