யாழில் துப்பாக்கி சூடு - ஒருவர் காயம் - மற்றுமொருவர் தப்பியோட்டம்

2 பங்குனி 2025 ஞாயிறு 09:24 | பார்வைகள் : 450
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் மீது இன்று பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் , மற்றுமொருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினை பொலிஸார் மறித்த போது , பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை சாரதி தொடர்ந்து செலுத்தி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அதில், ஒருவர் காயமடைந்த நிலையில் , மற்றையவர் டிப்பர் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பியோடியுள்ளார். காயமடைந்தவரை பொலிஸார் கைது செய்து , பொலிஸ் பாதுகாப்புடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதேவேளை, தப்பியோடிய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.