மீண்டும் சுந்தர். சியுடன் கைகோர்ப்பதை உறுதி செய்த விஷால்!

1 மாசி 2025 சனி 10:09 | பார்வைகள் : 2820
கடந்த 2015 ஆம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் ஆம்பள திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் ஆக்ஷன் எனும் திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இவர்களது கூட்டணியில் மதகஜராஜா எனும் திரைப்படம் உருவான நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றி நடை போடுகிறது.
இந்த படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காமெடி கலந்த ஆக்சன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது இந்நிலையில்தான் மதகஜராஜா வெற்றியை தொடர்ந்து சுந்தர். சி, விஷால் ஆகிய இருவரும் நான்காவது முறையாக கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என தகவல் வெளியாகி வருகிறது.
இது தொடர்பாக சென்னை காளிகாம்பாள் கோயிலில் தரிசனம் செய்ய வந்த விஷாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஷால், “விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” என்று அப்டேட் கொடுத்துள்ளார். எனவே இனிவரும் நாட்களில் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.