வெளிநாட்டு உதவியை நிறுத்தினார் டிரம்ப் - யுஎஸ்எயிட்டின் நிதியை நம்பியிருந்த இலங்கை அமைப்புகள் நெருக்கடியில்
3 மாசி 2025 திங்கள் 14:26 | பார்வைகள் : 286
அமெரிக்காவின் வெளிநாட்டு உதவியை இடைநிறுத்தி வைப்பதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளமை யுஎஸ் எயிட் செயற்பட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அதன் இலங்கை சகாக்களை பெரும் குழப்பத்தில்தள்ளியுள்ளது.
ஜனவரி 20ம் திகதி டொனால்ட் டிரம்ப் யுஎஸ்எயிட்டின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக இடைநிறுத்துமாறு உத்தரவிட்டார்.
மேலும் இந்த திட்டங்கள் அமெரிக்காவிற்கு முதலிடம் என்ற வெளிவிவகார கொள்கைக்கு ஏற்ப முன்னெடுக்கப்படுகின்றனவா என ஆராய்ந்து 90 நாட்களிற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் டிரம்ப் உத்தரவிட்டார்.
இதன் பின்னர் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர்மார்க்கோ ரூபியோ நிதியை முடக்கிவைப்பதாக உத்தரவிட்டார்.
இலங்கைக்கு அதிகளவு அபிவிருத்தி உதவிகளை யுஎஸ்எயிட் அமைப்பே வழங்கி வந்துள்ளது.இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு அரசசார்பற்ற அமைப்புகளிற்கும் யுஎஸ்எயிட் நிதி உதவியை வழங்கிவருகின்றது.
அரசசார்பற்ற அமைப்புகள் சிவில் சமூக அமைப்புகளிற்கான பெருமளவு நிதியை யுஎஸ்எயிட்டே வழங்குகின்றது என அரசசார்பற்ற அமைப்புகளிற்கான செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த வருடம் 15 பில்லியன் வரை யுஎஸ்எயிட் வழங்கியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்பவன்முறை உட்பட ஏனைய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கு உளநல ஆலோசனை ஆற்றுகையை வழங்கும் வுமென் இன் நீட் என்ற அரசசார்பற்ற அமைப்பு இதன் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இந்த அமைப்பு குடும்பவன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கு உடனடி புகலிடம் மற்றும் சட்ட உதவிகளையும் வழங்குகின்றது.
இந்த அமைப்பின் 85 வீத செயற்பாடுகளிற்கான நிதியை யுஎஸ்எயிட்டே வழங்குகின்றது.
இரத்தினபுரியில் உள்ள அவர்களின் நெருக்கடிசேவைகளிற்கான நிலையத்திற்கு யுஎஸ்எயிட் அமைப்பே முழுமையான நிதியுதவியை வழங்குகின்றது..இந்த நெருக்கடி நிலையத்தில் 7 பேர் பணிபுரிகின்றனர் கடந்த வருடம்950 பெண்களிற்கு இந்த நிலையம் சேவையை வழங்கியது.
இந்த நிலையத்தை நாங்கள் நிரந்தரமாக மூடவேண்டிய நிலையில் உள்ளோம் என வின் திட்டத்தின் சட்ட முகாமையாளரான மரியம் முகமட் தெரிவிக்கின்றார்.
நாங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா ஆராய்ந்து செயற்படுவதற்கான அமைதியை மீண்டும்வழங்கினாலும் கூட இடைப்பட்ட காலத்திற்கான நிதி உதவியை வழங்குவதாக யுஎஸ்எயிட் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இலாபநோக்கமற்ற அமைப்பான எங்களால் இந்தசெலவை சுமக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான தங்களின் புகலிட நிலையங்கள் முழுவதுமாக நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுஎஸ்எயிட் அமைப்புடன் ஐந்து வருட ஒப்பந்தத்தை செய்துகொண்ட வின் அமைப்பு யுஎஸ்எயிட்டின் நிதி உதவி காரணமாக குறிப்பிடத்தக்க அளவிற்கு தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது.
ஆனால் தனியொரு நிதி வழங்குநரை மாத்திரம் நம்பியிருப்பதில் காணப்படும் ஆபத்தை தற்போது அவர்கள் உணர்கின்றனர்.
யுஎஸ்எயிட்டின் நிதிஉதவி மிகப்பெரியதாக காணப்பட்டதால் நாங்கள் வருமானத்திற்காக ஏனைய வழிமுறைகளை நாடவில்லை என தெரிவித்துள்ள மரியம் முகமட் சில நாடுகளிலிருந்து சில நிதி உதவிகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை எதனையும் அவர்கள் வழங்காதமை குறித்து நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் எங்களை இந்த நிலைக்கு தயார்செய்வதற்கான காலஅவகாசமும் இருக்கவில்லை,என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி virakesari