முகக்கவசம் அணியுமாறு இலங்கையர்களுக்கு அறிவிப்பு
5 மாசி 2025 புதன் 09:26 | பார்வைகள் : 156
இலங்கையின் பெரும்பாலான நகரங்களில் இன்று புதன்கிழமை நாள் முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதால், முடிந்தவரை அனைவரும் முகக்கவசம் அணியுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், குருநாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பில்பிட்டிய, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் சற்று ஆரோக்கியமற்ற நிலை காணப்பட்டது.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும்.
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று சுற்றோட்டத்தினால் நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் சில நாட்களுக்கு அதிகரிக்கலாம்.
காற்றின் தரம் குறைவதால், முகக்கவசம் அணிவதோடு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.