Bobigny : மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது!
5 மாசி 2025 புதன் 16:03 | பார்வைகள் : 529
பாடசாலை மாணவர்கள் தாக்கப்படுவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை இல்-து-பிரான்சுக்குள் மட்டும் ஆறு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 4 ஆம் திகதி Bagneux (Hauts-de-Seine) நகரில் மாணவன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், அதே நாளில் மற்றுமொரு தாக்குதல் சம்பவம் Bobigny (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய நடுத்தர கல்வி மாணவன் ஒருவர், நேற்று பெப்ரவரி 4 ஆம் திகதி மாலை 5 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
ஐந்து மாணவர்கள் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் தலையில் தாக்கப்பட்டு குறித்த மாணவன் படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்ட மாணவன், செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பில் இருவரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.