முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்க மாட்டீர்கள்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆவேசம்
![முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்க மாட்டீர்கள்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆவேசம்](ptmin/uploads/news/India_rathna_annamalai-new.jpg)
6 மாசி 2025 வியாழன் 03:10 | பார்வைகள் : 381
இரும்புக் கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், நீங்கள் இருக்க மாட்டீர்கள்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்தார்.
அவர் அளித்த பேட்டி:
திருப்பரங்குன்றம் சரித்திரம், அமைச்சர் சேகர்பாபுக்கு தெரியுமா? கடந்த, 1926ம் ஆண்டு இதே பிரச்னை வந்தபோது, அங்கிருந்த சப்- ஜட்ஜ் அளித்த தீர்ப்பில், 'திருப்பரங்குன்றம் கோவில், எந்த சந்தேகமுமின்றி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது; நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானவை' என, தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அப்பீலுக்கு சென்றபோது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.
ஆங்கிலேயர்கள், ஹிந்து மக்களுக்காக தற்காத்த ஒரு கோவிலை, தி.மு.க., தாரைவார்க்க தயாராக இருக்கிறது. புதிதாக இன்னொரு மதத்தை சேர்ந்தவர்கள் பிரச்னையை ஆரம்பிக்கின்றனர். ஆடு எடுத்து சென்று சாப்பிடுகின்றனர். ஒரு எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை. இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என, அமைச்சர் ரகுபதி சொல்கிறார். அவர் அடக்கிய லட்சணத்தை பார்த்தோம்.
அடக்கி காட்டுவோம்
பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடம் தவறு செய்பவர்களை பிடிக்க வேண்டிய காவல் துறையை, பா.ஜ.,வினரை, 350 இடங்களில் நள்ளிரவில் கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்து உள்ளனர். அந்தந்த ஊரில் உள்ள பா.ஜ., தலைவர்களை, வளர்த்து கொண்டு இருக்கிறீர்கள்.
மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்தில், மக்கள் எழுச்சியோடு வந்துள்ளனர். காவி வேட்டி கட்டி கொண்டு முருக பக்தன், சிவ பக்தன் என்று சொல்லி கொண்டு இருக்கக் கூடாது. சனாதன தர்மம், ஹிந்து தர்மம் வேறு இல்லை.
இஸ்லாமியர்கள் சகோதரர்கள் தான். பிரச்னையை ஏற்படுத்தியது யார்? இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என, 'சீன்' போட்டு சுற்றினால், உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பது, எங்களுக்கு தெரியும்; அடக்கி காட்டுவோம்.
அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதியாக இருப்பதால், மரியாதை தருகிறோம். வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும்.
லோக்சபாவில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில், தமிழகத்தில் போதை பொருள் விற்றதாக, 2021ம் ஆண்டில் 9,632 பேர்; 2022ம் ஆண்டு 588; 2023ல் 421; 2024ம் ஆண்டு 113 பேர் மீது வழக்கு போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
ஒரு ஆண்டில், 9632 வழக்குகள், 3 ஆண்டுகளில், 1,122 வழக்குகள்தான் என்றால், எப்படி கஞ்சா விற்பனையை கட்டுபடுத்துவீர்கள்? கஞ்சாவின் தலைநகரமாக தமிழகம் உள்ளது.
இரும்புக் கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், நீங்கள் இருக்க மாட்டீர்கள். நீதிமன்றம் அனுமதி தந்த வழியில், போராட்டம் நடக்கிறது. அவ்வளவு பேர் கூடினரே... பஸ்சை உடைத்தனரா, தீ வைத்து கொளுத்தினரா? அமைதியான முறையில் பேசி சென்று உள்ளனர்.
பாடம் புகட்டப்படும்
பிரச்னையை உருவாக்குவது தி.மு.க.,தான். நவாஸ் கனி அங்கு செல்ல, என்ன உரிமை இருக்கிறது? அவரை கைது செய்தீர்களா? சிறுபான்மையினர் ஓட்டு வேண்டும் என்பதற்காக, அமைதியான முறையில் ஹிந்து பக்தர்கள் வந்தால் கை வைக்கிறீர்கள்.
காவல் துறையை, போதைபொருள் கடத்தலை தடுக்க, அனுப்புங்கள். சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து, ஆட்டோவில் பெண்ணை கடத்தி செல்வதை பார்த்த ஒரு நபர், போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் சொல்லிய பின், அப்பெண்ணை மீட்க வேண்டி உள்ளது.
சென்னையில் அதிகமான போலீசும், ரோந்து போலீசும் இருந்தும், பொது மக்கள் தந்த தகவலில்தான், குற்றவாளியை பிடிக்க முடிவதை பார்த்து, அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு வெட்கப்பட வேண்டும்.
முருக பக்தர்களை பார்த்து இரும்புக் கரம் கொண்டு அடக்கும் முன், குற்றங்களை செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியதுதானே? ஹிந்துக்கள் மீது தான் இரும்புக்கரமா? மற்றவர்கள் மீது இருக்காதோ? ஹிந்துகள், பிரித்து ஓட்டு போடுவர் என்பதால் அவமானப்படுத்தலாம்... எழுச்சி என்பது ஆரம்பம் தான்; வருங்காலத்தில் தி.மு.க.,வுக்கு தக்க பதிலடி தந்து, பாடம் புகட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
![](/images/engadapodiyalxy.jpg)