வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
![வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு](ptmin/uploads/news/India_rathna_fog-chennai.jpg)
8 மாசி 2025 சனி 03:17 | பார்வைகள் : 1054
சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள், விமான சேவைகளில் பாதிப்பு நிலவியது.
தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் வெண்புகையாய் பனி படர்ந்து காணப்பட்டதால் சாலைகள் தெரியாத சூழல் நிலவியது.
கடும் பனிமூட்டம் எதிரொலியாக சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டது. விமானங்கள் தரையிறங்க முடியாத அளவுக்கு பனி நிலவியது. தரை இறங்குவதில் சிக்கல் நீடித்ததால் விமானம் வானத்தில் வட்டமடித்தது.
பனிமூட்டம் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள் தாமதமாகின. தண்டவாளங்கள் தெரியாத அளவு பனி காணப்பட்டதால் ரயில்கள் மெதுவாக சென்றன. அதனால் அரை மணி நேரம் தாமதமாக சென்னைக்கு ரயில்கள் வந்தன.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமல்லாது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. தலைநகர் மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் பனி மூட்டம் காணப்பட்டது.
விழுப்புரத்தில் சாலைகளே தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் பயணித்தனர். கோவையிலும் அதிகாலையில் பனிமூட்டம் அதிகம் காணப்பட்டது.
![](/images/engadapodiyalxy.jpg)