திருப்பதி லட்டு கலப்பட புகார்: 4 பேர் கைது
![திருப்பதி லட்டு கலப்பட புகார்: 4 பேர் கைது](ptmin/uploads/news/India_rathna_thirupathi-laddu.jpg)
10 மாசி 2025 திங்கள் 03:08 | பார்வைகள் : 300
திருப்பதி லட்டு கலப்பட புகார் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த நெய் சப்ளை நிறுவனர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவின் திருப்பதி - திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், அந்த லட்டில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டு வினியோகிக்கப்பட்டதாக தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்தாண்டு புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஐந்து பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு கடந்த நவம்பரில் அமைக்கப்பட்டது. சி.பி.ஐ., இயக்குனர் மேற்பார்வையில் இந்த குழு விசாரணை நடத்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு, ஆந்திராவின் திருமலை திருப்பதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக தீவிர விசாரணை நடத்தியது.
இந்நிலையில், லட்டு கலப்பட விவகாரத்தில் விபின் ஜெயின், பொமில் ஜெயின், அபூர்வ சாவ்டா, திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் உள்பட நான்கு பேரை, அதிகாரிகள் இரவு கைது செய்தனர். அவர்களிடம் லட்டு விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
![](/images/engadapodiyalxy.jpg)